Publish Date: Sun, 23 Jun 2024 (17:46 IST)
Updated Date: Sun, 23 Jun 2024 (17:47 IST)
திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர் ஒருவர் ஐந்து பவுன் தங்க சங்கிலியை கடலில் குளிக்கும் போது தவறவிட்ட நிலையில் கடல் பாதுகாப்பு பணியாளர்கள் 50 பேர் அதிரடியாக அந்த தங்க சங்கிலியை தேடி கண்டுபிடித்த அதிசயம் நடந்துள்ளது.
பொதுவாக கடலில் ஒரு பொருளை தொலைத்து விட்டால் அது எளிதில் கிடைக்க வாய்ப்பில்லை என்று தான் கூறப்படுவதுண்டு. குறிப்பாக தங்கள் சங்கிலி போன்ற சின்ன பொருள் தொலைந்தால் கிடைப்பது என்பது சாத்தியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர் ஒருவர் குளித்து கொண்டிருந்தபோது 5 சவரன் தங்க சங்கிலி கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக கடல் பாதுகாப்பு குழுவினரிடம் புகார் அளித்த நிலையில் 50 பேர் கொண்ட குழு சங்கிலியை தேடி கண்டுபிடிக்க களத்தில் இறங்கியது.
இதனை அடுத்து சில மணி நேரங்கள் தேடிய நிலையில் கடல் பாதுகாப்பு பணியாளர் வேலுச்சாமி என்பவர் கையில் அந்த ஐந்து பவுன் தங்க சங்கிலி கிடைத்ததை அடுத்து அந்த சங்கிலி பக்தரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.