Publish Date: Mon, 30 Sep 2019 (18:12 IST)
Updated Date: Mon, 30 Sep 2019 (18:16 IST)
அரியலூரில் மருத்துவமனை எக்ஸ்ரே ரூமில், ஒரு நோயாளி மர்மமாக இறந்துகிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் இறவாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் மெக்கானிக் வேலை பார்த்துவந்தார். இந்நிலையில் இவர் தனது மனைவி கீதாவுடன் ஜெயங்கொண்டம் என்ற பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சென்றார்.
அப்போது அவருக்கு தேனீர் வாங்க கீதா வெளியே சென்றுள்ளார். திரும்ப வந்த கீதாவிற்கு அதிர்ச்சி. மருத்துவமனையில் மணிகண்டனை காணவில்லை. அதன் பிறகு மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தார் கீதா. ஆனால் மணிகண்டனை எங்கும் காணமுடியவில்லை.
சிறிது நேரம் கழித்து கீதாவிற்கு மேலும் ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. மருத்துவமனையில் வேலை பார்க்கும் ஊழியர்கள், எக்ஸ்ரே எடுக்கும் அறையில் ஒருவர் இறந்துகிடப்பதாக தகவல் தெரிவித்தனர். அதன் பின்பு கீதா பதறிச்சென்று பார்த்தபோது, இறந்துகிடப்பது மணிகண்டன் என தெரியவந்தது.
இத்தகவலை அறிந்து விரைந்து வந்த போலீஸார், மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மணிகண்டன் எப்படி இறந்தார் என்பதையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் மர்மமாக ஒருவர் இறந்து கிடந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.