மதுரையில் இன்று நடைபெற்று வரும் முருகன் மாநாட்டில், ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் கலந்துகொள்ளவிருந்த நிலையில் அவரது விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டதால், அவரது வருகை ரத்து செய்யப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை மதுரையில் முருகன் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். இந்நிலையில், இந்த மாநாட்டிற்கு வருவதாக கூறப்பட்ட ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது.
விமானக் கோளாறு சரிசெய்யப்பட்ட பின் அந்த விமானம் புறப்படுமா, அல்லது மாற்று விமானம் மூலம் பவன் கல்யாண் மதுரைக்கு வருவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இன்றைய மாநாட்டில் ஆந்திர மாநில துணை முதல்வர் கலந்துகொள்வார் என நயினார் நாகேந்திரன் உறுதி செய்திருந்த நிலையில், அவரது வருகை ரத்து செய்யப்படவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.