மதுரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கள்ளழகர் கோயிலில் மேற்கொள்ளப்பட்டு வந்த புதிய கட்டுமான பணிகளுக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சுமார் ரூபாய் 50 கோடி மதிப்பில் இந்த கோயிலில் பல்வேறு புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்த புதிய கட்டுமான பணிகள் காரணமாக கோயிலின் தொன்மை மற்றும் பழமை பாதிக்கப்படுவதாகவும், மேலும் கோயிலின் நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் மனுதாரர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை அமர்வு, மறு உத்தரவு வரும் வரை கள்ளழகர் கோயிலில் நடைபெற்று வரும் அனைத்து விதமான புதிய கட்டுமான பணிகளையும் உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், இந்த மனுவில் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் உள்ளிட்டோர் நவம்பர் 5-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.