Publish Date: Wed, 05 May 2021 (12:28 IST)
Updated Date: Wed, 05 May 2021 (12:29 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் மட்டும் இயங்க அனுமதிப்பது ஏன் என மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. எனினும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன். இந்நிலையில் மீண்டும் நாளை முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா அதிகரித்துள்ள நிலையில் டாஸ்மாக் கடைகள் விற்பனை நேரத்தை குறைக்காதது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையிலும் மதுபான விற்பனையை அனுமதிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதிகள், இதுகுறித்து விளக்கமளிக்க மத்திய உள்துறை செயலர் மற்றும் தமிழக உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளனர்.