Publish Date: Mon, 29 Nov 2021 (16:04 IST)
Updated Date: Mon, 29 Nov 2021 (16:07 IST)
அம்மா உணவகங்கள் மற்றும் க்ளினிக்குகளை மூட திமுக முயற்சிப்பதாக ஓபிஎஸ் கூறியது குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் திறக்கப்பட்ட அம்மா உணவகங்கள் மற்றும் மினி க்ளினிக்குகள் தமிழகத்தின் பல பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள திமுக அரசு இவற்றை முறையாக பராமரிக்காததுடன், கொஞ்சம் கொஞ்சமாக மூட முயற்சித்து வருவதாகவும் எதிர்கட்சி துணை தலைவர் ஓபிஎஸ் குற்றம் சாட்டி அறிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் “2,000 அம்மா கிளினிக் என்றார்கள். 1,820 டாக்டர்களை நியமித்தனர். இதில் செவிலியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை. இதை வைத்து எப்படி அம்மா கிளினிக் நடத்த முடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் “காழ்ப்புணர்ச்சியான அரசியல் செய்தவர்கள் அதிமுகவினர். ஒ.பன்னீர்செல்வம் ஒன்றும் இல்லாத விசயத்தை நீண்ட அறிக்கையாக கூறியுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.