Publish Date: Sat, 06 Jan 2024 (23:04 IST)
Updated Date: Sat, 06 Jan 2024 (23:18 IST)
கூடலூர் அருகே சிறுத்தை தாக்கியதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பந்தலூர் மேங்கோ ரேன்ஜ் எஸ்டேட்டில் பணிபுரிபவர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிவசங்கர் கர்வா. இவரது மூன்று வயது மகளான நான்சி அப்பகுதியில் உள்ள பால்வாடியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது காட்டுப் பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை, குழந்தை நான்சியை தூக்கி சென்று தாக்கியுள்ளது. அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டதால் குழந்தையை சிறுத்தை விட்டுவிட்டு சென்றுவிட்டது. பின்னர் குழந்தையை மீட்டெடுத்த பொதுமக்கள், பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் நான்சி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த குழந்தையின் உறவினர்கள் சிறுத்தையை பிடிக்க கோரி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கீர்த்திகா (4) வயது கடந்த நான்காம் தேதி சிறுத்தையிடமிருந்து இருந்து உயிர் தப்பியது. இதே பகுதியில் 3 பெண்களை சிறுத்தையை தாக்கியதும் அதில் ஒரு பெண் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.
மனிதர்களை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்று மீண்டும் ஒரு குழந்தை சிறுத்தையால் தாக்கப்பட்டு உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Senthil Velan
Publish Date: Sat, 06 Jan 2024 (23:04 IST)
Updated Date: Sat, 06 Jan 2024 (23:18 IST)