Publish Date: Wed, 10 Aug 2022 (14:37 IST)
Updated Date: Wed, 10 Aug 2022 (14:39 IST)
வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை சிறுத்தை தாக்கியதால் அந்த சிறுமி பலியான சம்பவம் நீலகிரி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி அருகே உள்ள அரக்காடு என்ற பகுதியில் அடிக்கடி குடியிருப்பு பகுதியில் சிறுத்தை வந்து செல்வதாக அந்த பகுதி மக்கள் வனத்துறையிடம் ஏற்கனவே புகார் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் உதகை அருகே அரக்காடு என்ற பகுதியில் 4 வயது சிறுமி தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை அந்த சிறுமியை தாக்கியது.
இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் சிறுத்தையை விரட்டி அடித்துள்ளனர். இருப்பினும் சிறுத்தை தாக்கியதில் படுகாயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.