Publish Date: Sat, 03 Feb 2018 (13:46 IST)
Updated Date: Sat, 03 Feb 2018 (13:48 IST)
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும் நடிகையுமான குஷ்பு பிரதமர் மோடி எந்த கேள்வி கேட்டாலும் கவுண்டமணி செந்தில் போல அதுதான் இது என சம்மந்தமே இல்லாமல் பேசுகிறார் என விளாசியுள்ளார்.
நெல்லை மாவட்டம் முக்கூடலில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பு. அவர் பேச ஆரம்பிக்கும் போது இரவு 9.50 ஆகிவிட்டதால், நான் பேசி முடிக்கும் போது எப்படியும் என் மீது எஃப்ஐஆர் போடுவார்கள். ஆனால் நான் அதப்பற்றி கவலைப்பட போவதில்லை என்றார்.
மேலும், பிரதமர் மோடி எங்கு சென்றாலும் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடை அணிந்து நாடு நாடாக சுற்றுகிறார். ஆனால் அவர் மக்களையும், விவசாயிகளையும் பற்றி கவலைப்படவில்லை. கவுண்டமணி, செந்தில் போல் நாம் எந்த கேள்வி கேட்டாலும் அதற்கு பதில் அதுதான் இது என்கிறார். மற்றொரு கேள்வி கேட்டால் அதானே இது என பதில் இருக்கிறது என விளாசினார் குஷ்பு.
முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி என குடும்பமே தங்களை அர்ப்பணித்துள்ளது. அந்த கட்சியை யாராலும் அழிக்க முடியாது என குறிப்பிட்டார்.