Publish Date: Tue, 12 Mar 2024 (10:09 IST)
Updated Date: Tue, 12 Mar 2024 (10:10 IST)
தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? என்று பாஜக நிர்வாகி குஷ்பு பேசியுள்ளது சர்ச்சையாகி உள்ள நிலையில் இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு நேற்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தபோது, தாய்மார்களுக்கு ரூ.1000 பிச்சை போட்டால் திமுகவுக்கு வாக்களிப்பார்களா? போதைப்பொருளுக்கு எதிரான திமுக கூட்டணி கட்சிகள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இந்த 1000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என குஷ்பு கூறிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். எம்ஜிஆர் ஏழைகளுக்கு வழங்கிய இலவச உணவு 'பிச்சை' என்று முரசொலி மாறன் சொன்னார். பெண்கள் பேருந்துகளில் ஓசி பயணம் செய்கிறார்கள் என்று பொன்முடி சொன்ன போது யாரும் கேட்கவில்லை. ஆனால் ஒரு கருத்தை கூறினால் மட்டும் அதை திரித்து நெகட்டிவ் கருத்தை பரப்பி வருகின்றனர் என்று கூறினார்.
மேலும் டாஸ்மாக்கில் செலவழிக்கும் பணத்தை சேமிக்க நமது பெண்களுக்கு உதவி செய்யுங்கள் என்றும் அவர் திமுக அரசை கேட்டு கொண்டுள்ளார்.