கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி கார் விபத்தில் சிக்கினார்!
கொடநாடு கொலை வழக்கில் திடீர் திருப்பம்: தேடப்பட்டு வந்த குற்றவாளி கார் விபத்தில் சிக்கினார்!
Publish Date: Sat, 29 Apr 2017 (11:44 IST)
Updated Date: Sat, 29 Apr 2017 (11:47 IST)
ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் காவலில் ஈடுபட்டிருந்த காவலாளியின் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த கேரளாவை சேர்ந்த குற்றவாளி சயான் இன்று சாலை விபத்தில் சிக்கினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம் பகதூர் கத்தியால் குத்தப்பட்டு மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இந்த கொலை வழக்கில் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் தான் மூளையாக செயல்பட்டார் எனபது காவல்துறையின் தீவிர விசாரணையில் தெரியவந்தது.
கொடநாடு எஸ்டேட்டில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களை திருட கனகராஜுக்கு அவரது நண்பர் கேராளா திருச்சூரை சேர்ந்த சயான் என்பவர் உதவி செய்துள்ளார். சயான் கோவையில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கனகராஜ் வகுத்து கொடுத்த திட்டத்தை கூலிப்படையின் உதவியுடன் சயான் செயல்படுத்தியதாக கூறப்படுகிறது.
எனவே காவல்துறை இவர்கள் இருவரையும் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் சேலத்தில் நேற்று இரவு கனகராஜ் போலீசில் சரணடைய இருந்ததாகவும், அதற்காக நண்பர் ஒருவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கிக்கொண்டு சரணடைய சென்றுள்ளார். அப்போது வேகமாக வந்த சொகுசுகார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்நிலையில் இந்த வழக்கின் மற்றொரு குற்றவாளியான சயானும் இன்று சாலை விபத்தில் சிக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலக்காடு அருகே காரில் சென்ற போது சயான் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் சயானுடன் இருந்த அவரது நண்பர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்தில் படுகாயமடைந்த சயான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகள் இருவரும் அடுத்தடுத்து சாலை விபத்தில் சிக்கி, ஒருவர் மரணமடைந்தும், ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.