Publish Date: Tue, 06 Aug 2019 (15:18 IST)
Updated Date: Tue, 06 Aug 2019 (15:26 IST)
சென்னையிலிருந்து கொச்சி புறப்பட்ட விமானம் ஒன்று, ஓடுப்பாதைக்கு சென்றபோது கோளாறு ஏற்பட்டு மீண்டும் நிறுத்தப்பட்டது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கொச்சிக்கு, நேற்று முந்தினம் இரவு 8.30 மணிக்கு புறப்பட்ட விமானம், ஓடு பாதைக்கு சென்றபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனை கண்டுபிடித்த விமான ஓட்டுநர் இது குறித்து கட்டுப்பாடு அறைக்கு தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து அந்த விமானம் மீண்டும் மீனம்பாக்கம் விமான நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. பிறகு உடனே தொழில் நுட்ப வல்லுநர்கள் விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பழுதை உடனடியாக சரி செய்ய முடியவில்லை.
இதனால் விமானம் புறப்பட தாமதமானதால், விமானத்தில் இருந்த பயணிகள் கோஷம் போட ஆரம்பித்தனர். பின்பு அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி விமானத்தில் இருந்து கீழே இறக்கி, பயணிகளுக்கான ஓய்வறையில் தங்க வைத்தனர்.
அதன் பின்பு சுமார் 4 ½ மணி நேரமாகியும் பழுதை சரி செய்யமுடியாததால், மாற்று விமானம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். பின்பு அந்த மாற்று விமானம் பயணிகளை ஏற்றிகொண்டு நள்ளிரவு 1.30 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை முதலிலேயே கண்டறிந்த விமானியால், 183 பயணிகளின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.