Publish Date: Sun, 29 Oct 2023 (17:20 IST)
Updated Date: Sun, 29 Oct 2023 (17:22 IST)
கேரளாவில் கிறிஸ்தவ வழிபாட்டு தலத்தில் குண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாக்குளத்தில் உள்ள கிறிஸ்தவ வழிபாட்டு கூட்டம் ஒன்றில் 3 டிபன் பாக்ஸ் வெடிக்குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒருவர் பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பேரும், படுகாயங்களுடன் 20க்கும் மேற்பட்டோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவில் நடந்த இந்த வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் அதி எச்சரிக்கையுடன் பல பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழக கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை செண்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
பயணிகளின் உடமைகளை சோதனை செய்த பிறகே செண்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். அதேபோல அம்பத்தூர், ஆவடி ரயில் நிலையங்களிலும் ரயில்வே போலீஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி சமயம் ஆதலால் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.