கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி.என்.ஆனந்த் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியான சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சம்பவ இடம் விரைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த கூட்ட நெரிசல் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தனி நபர் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதை தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என் ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது 5 பிரிவுகளில் கரூர் நகர காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. BNS 105, 110, 125, 223, TNPPDL 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த கூட்ட நெரிசல் தொடர்பான விசாரணை ஆணையர் இன்றே கரூர் வந்து விசாரணையை தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Edit by Prasanth.K