Publish Date: Mon, 08 Mar 2021 (12:32 IST)
Updated Date: Mon, 08 Mar 2021 (12:35 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த கருணாஸ் அதிலிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் அதிமுகவில் முந்தைய தேர்தலில் கூட்டணியில் இருந்த ஒற்றை இலக்க கட்சிகளான கருணாஸின் முக்குலத்தோர் புலி படை உள்ளிட்ட கட்சிகளிடையே தொகுதி பங்கீட்டில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் அதிமுக ஆதரவு நிலைபாட்டிலிருந்து மாறியுள்ள கருணாஸ் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அனைத்து தொகுதிகளிலும் அதிமுகவை வீழ்த்த இணைந்து பணியாற்றுவதாக கூறியுள்ள கருணாஸ் திமுகவிடம் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதிகள் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திடீர் மாற்றம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.