Publish Date: Tue, 29 May 2018 (15:37 IST)
Updated Date: Tue, 29 May 2018 (15:48 IST)
இன்று தமிழக சட்டசபை கூடியதும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தூத்துகுடி சம்பவம் குறித்து ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார்.
ஆனால் இந்த தீர்மானத்தை சபாநாயகர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரையில் திமுக சட்டப்பேரவையில் பங்கேற்காதென்று கூறி திமுக தரப்பு வெளிநடப்பு செய்தது.
இந்நிலையில், முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த எம்எல்ஏவான கருணாஸும் சட்டசபையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பின்வருமாறு பேசினார்.
தூத்துக்குடி மக்கள் பிரச்சினை பற்றி பேசியபோது, அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் எள்ளி நகையாடினர். 13 உயிர்களுக்கு இந்த மன்றம் கொடுக்கும் மரியாதை இதுதானா? இதுதானா அம்மா தலைமையில் நடக்கும் ஆட்சியா?
நடக்கும் தவறை சுட்டி காட்ட ஒரு எம்எல்ஏவுக்கு உரிமை இல்லை. அவர்கள் செய்ததை சரி என்று சொல்வது மட்டுமே அவர்களுக்கு சேவை. இது என்ன மன்றம்? 234 அவை உறுப்பினர்களும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களை எவ்வளவு கவுரமாக நடத்த வேண்டும். ஆனால், அவன், இவன் என்று அவைக்குள் பேசுகிறார்கள். இதை எப்படி சபாநாயகர் எப்படி அனுமதிக்கிறார்.
உலகில் போனால் வராதது இரண்டுதான். ஒன்று உயிர், மற்றொன்று மானம். இந்த அவையில் மானம் பறிபோகிறது. இதை சபாநாயகர் கண்டிக்கவில்லை. இதையெல்லாம் கண்டித்து இந்த சட்டசபை கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறேன் என தெரிவித்தார்.