Publish Date: Wed, 14 Feb 2018 (12:15 IST)
Updated Date: Wed, 14 Feb 2018 (12:41 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது கலைஞர் கருணாநிதி என்ன கூறினார் மற்றும் அதிமுக ஆட்சியை ஏன் கவிழ்க்க வில்லை என்பது பற்றி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
ஜெயலலிதா இருந்தவரை மட்டுமே அதிமுக பலமாக காட்சி அளித்தது. உடல் நலக்குறைபாடு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அதிமுகவும் பலவீனமானது. ஜெ.வின் மறைவிற்கு பின் தீபா, ஓ.பி.எஸ், எடப்பாடி, தினகரன் என பல பிரிவுகளாக அதிமுக உடைந்தது. ஆனாலும், நடைபெறும் ஆட்சியை கவிழ்ப்பதற்கு திமுக எந்த நடவடிக்கைகளும் இறங்கவில்லை. எனவே, கருணாநிதி இருந்திருந்தால் இந்நேரம் ஆட்சியை கவிழ்த்திருப்பார் என அரசியல் தலைவர் முதல் பொதுமக்கள் வரை பலரும் பேசத் தொடங்கினர். இதற்கு ஸ்டாலின் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது அதற்கான பதிலை அவர் அளித்துள்ளார்.
திருவள்ளூரில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டனப் பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசும்போது “கலைஞரின் ஆட்சியைத்தான் இரண்டு முறை மத்திய அரசு கலைத்தது. ஆனால், ஆட்சியை கவிழ்க்க கலைஞர் ஒருமுறை கூட நினைத்தது இல்லை. ஜெ.விற்கும், ஜானகிக்கும் இடையே பிரச்சனை வந்த போது, ஆட்சியை கவிழ்க்குமாறு பல கட்சிகள் கலைஞரிடம் வேண்டுகோள் விடுத்தன. ஆனால், ஜனநாயகத்திலும், மாநில சுயாட்சியிலும் நம்பிக்கை கொண்டிருக்கும் திமுக ஒருபோதும் ஆட்சி கவிழ்ப்பிற்கு துணை நிற்காது என கலைஞர் மறுத்துவிட்டார். எனவே, நாங்களும் அதை தொடர்ந்து கடைபிடிப்போம். மக்கள் ஆதரவோடு தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிப்போம்” என அவர் பேசினார்.
மேலும், மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த போது, கலைஞரும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது எங்களை அழைத்த அவர் “ஜெயலலிதா ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறார். விபரீதமாக ஏதேனும் நடந்தால் அதிமுக உடையும். அதை நாம் வேடிக்கைதான் பார்க்க வேண்டுமே தவிர அதைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிக்கக் கூடாது” என எங்களுக்கு உத்தரவிட்டார்.
நாங்கள் நினைத்திருந்தால் மக்கள் விரும்பிய் படி ஆட்சியை ஒரு நிமிடத்தில் கவிழ்த்திருப்போம். ஆனால் கலைஞரின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து அமைதி காத்தோம். இந்த அரசு அதுவாக விரைவில் கவிழ்ந்து விடும்’ என அவர் பேசினார்.