Publish Date: Fri, 11 Aug 2017 (10:27 IST)
Updated Date: Fri, 11 Aug 2017 (10:37 IST)
பலவருடங்களுக்கு முன்பே தன்னை திமுகவில் சேரும்படி திமுக தலைவர் கருணாநிதி அழைத்தார் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
முரசொலி பத்திரிக்கை தொடங்கி 75 வருடம் ஆகிவிட்ட நிலையில், அதை கொண்டாடும் வகையில் திமுக சார்பில் நேற்று பவளவிழா கொண்டாடப்பட்டது. அதில், பல அரசியல் பிரமுகர்களும், பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். நடிகர் ரஜினிகாந்தும் இதில் கலந்து கொண்டார்.
இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கமல்ஹாசன் “ என்னிடம் நீங்கள் திமுகவில் சேரப்போகிறீர்களா எனக் கேட்கிறார்கள். திமுகவில் சேருவதாக இருந்தால் 1989ம் ஆண்டு கருணாநிதி என்னை அழைத்தபோதே சேர்ந்திருப்பேன். அப்போது எனக்கு கருணாநிதியிடமிருந்து ஒரு டெலிகிராம் வந்தது. அது ஒரு கேள்வி.. அந்த பெருந்தன்மையை நான் இன்னும் மறக்கவில்லை. அதற்கு பதில் சொல்லும் தைரியம் இல்லை. அதை மடித்து உள்ளே வைத்துக்கொண்டேன். இன்று வரை அதற்கு பதில் கூறவில்லை.
அவரின் பெருந்தன்மை என்னவென்றால் அதுபற்றி மறுபடியும் என்னிடம் கேட்கவில்லை. அது மூதறிஞர்களுக்கு, பெரியவர்களுக்கே உரித்தான தன்மை. அந்த மரியாதை இந்த மேடையிலும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் வந்தேன்” என அவர் பேசினார்.