Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2000 இஸ்லாமியர்கள் படுகொலையை வேறு மாநிலப் பிரச்சனை என்றவர் கருணாநிதி - டி.கே.ஆர். தாக்கு

2000 இஸ்லாமியர்கள் படுகொலையை வேறு மாநிலப் பிரச்சனை என்றவர் கருணாநிதி - டி.கே.ஆர். தாக்கு
, புதன், 4 மே 2016 (08:30 IST)
இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது அது இன்னொரு மாநிலப் பிரச்சனை எனக் கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.
 

 
திண்டுக்கல்லில் நடைபெற்ற மே தினக்கூட்டத்தில் கலந்து கொண்டு டி.கே.ரங்கராஜன், "சட்டமன்றத் தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. திமுகவிற்கும் பாஜகவிற்கும் நல்ல உறவு உள்ளது என்பதை வாக்காளர்கள் மறந்துவிடக்கூடாது அதிமுகவிற்கு பாஜகவுடன் மட்டுமல்ல ஆர்.எஸ்.எஸ் அமைப்பிடமும் நல்ல உறவு வைத்துள்ளது.
 
இரண்டாயிரம் பேர் குஜராத்தில் கொலை செய்யப்பட்ட போது திமுக தலைவர் கலைஞர் அது வேறு மாநிலத்தின் பிரச்சனை என்று நழுவிக்கொண்டார். இதை சிறுபான்மை மக்கள் மறந்துவிடக்கூடாது. ஆத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி மு.க.அழகிரிக்கு நெருங்கிய நண்பராக இருந்தவர். அவரது கட்டப் பஞ்சாயத்து தமிழ்நாடு முழுவதும் நடந்திருக்கிறது.
 
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்ற திமுக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரச்சனைகளைப் பற்றி சட்டமன்றத்தில் விவாதித்திருக்கிறார்களா? திமுக ஆட்சியில் அதிமுக உறுப்பினர்கள் பேசமுடியாது. அதிமுக ஆட்சியில் திமுக உறுப்பினர்கள் பேசமுடியாது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதாவோ, அதிகாரிகள் கொடுத்த விவரங்களை வைத்து பதில் சொல்வார். ஆனால், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் குறுக்கிடுவதற்கு அனுமதிக்கமாட்டார். திமுக ஆட்சியில் கலைஞரைப் புகழ்வதும், அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவைப் புகழ்வதும் தொடர்கிறது. தலைவர்களின் புகழ் பாடும் மன்றமாக சட்டமன்றம் உள்ளது.
 
குறைந்த பட்ச செயல்திட்டத்தை முன்வைத்துள்ள தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி-தமாகா அணி வெற்றி பெற வேண்டும். அப்போது தான் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியும்.திமுக, அதிமுக ஊழல் கட்சிகளை மீண்டும் ஆட்சிக்கு வர அனுமதிக்கக்கூடாது. டாஸ்மாக் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை குஷ்பு மீது போலீசார் திடீர் வழக்கு