Publish Date: Wed, 23 Feb 2022 (12:43 IST)
Updated Date: Wed, 23 Feb 2022 (12:46 IST)
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மநீம வேட்பாளர்களுக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பிப்ரவரி 19 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. அன்று வாக்குப்பதிவில் சிக்கல் ஏற்பட்ட 7 வாக்கு சாவடிகளில் அடுத்த நாள் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. பின்னர் நேற்று அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சார்பில் பலரும் போட்டியிட்ட நிலையில் பெரிய வெற்றியை ஈட்டவில்லை. இந்நிலையில் தனது வேட்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ள கமல்ஹாசன் “தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பண பலம், கூட்டணி பலம் கொண்டவர்களை எதிர்த்து தேர்தலில் போட்டியிட துணிந்த மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் அனைவருமே வெற்றி பெற்றவர்கள்தான்.
போட்டியிட்ட வார்டுகளில் வெற்றிபெற்றதாகவே நினைத்து, உங்களை வெற்றிபெற செய்யாததை எண்ணி வருந்தும் அளவிற்கு மக்கள் சேவையை தொடருங்கள். மக்களும் சில சமயம் கூட்டாக சேர்ந்து தவறான முடிவை எடுத்து விடுவதுண்டு. என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்காகதான். அதை இடைக்கால வெற்றி, தோல்விகள் மாற்றிடாது” என்று தெரிவித்துள்ளார்.