ஆர்கே நகர் கருத்துக்கணிப்பு: டிடிவி தினகரன் பரிதாபம்; ஓபிஎஸ் உற்சாகம்!
ஆர்கே நகர் கருத்துக்கணிப்பு: டிடிவி தினகரன் பரிதாபம்; ஓபிஎஸ் உற்சாகம்!
Publish Date: Sat, 08 Apr 2017 (11:54 IST)
Updated Date: Sat, 08 Apr 2017 (11:58 IST)
வரும் 12-ஆம் தேதி ஆர்கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் பலமாக உள்ளது. இதனையடுத்து ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.
ஆர்கே நகர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த போட்டியில் திமுக வேட்பாளர் மருத்துகணேஷ், அதிமுக அம்மா அணியை சேர்ந்த டிடிவி தினகரன், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த மதுசூதனன், பாஜகவின் கங்கை அமரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக உள்ளனர்.
அதிமுக இரண்டாக பிளவுபட்டு உள்ளதால் தேர்தல் பிரச்சாரம் பரபரப்பாக செல்கிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி திமுக வெற்றியை தட்டிச்செல்லும் என தொடக்கத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க யாருக்கு வெற்றி என்பது சற்று புதிராகவே உள்ளது.
இதனையடுத்து ஜூனியர் விகடன் கருத்துக்கணிப்பை நடத்தியது. 3731 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த ஓபிஎஸ் ஆதரவாளர் மதுசூதனன் 33.71% பேரின் ஆதரவை பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு 3731 பேரில் 1258 பேர் வாக்களித்துள்ளனர்.
இரண்டாவது இடத்தில் திமுகவின் மருதுகணேஷ் உள்ளார். அவருக்கு 23.53% மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன், என்னுடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது, 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறிவரும் அதிமுக அம்மா அணியை சேர்ந்த சசிகலா ஆதரவாளர் டிடிவி தினகரன் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அவருக்கு 15.36% மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.
பாஜகவின் கங்கை அமரன் 4.05% மக்களின் ஆதரவுடன் நான்காவது இடத்திலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா 5-வது இடத்தில் உள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் 11.98% மக்கள் யாருக்கும் வக்களிக்கப் போவதில்லை என கருத்து கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.