Publish Date: Thu, 31 May 2018 (11:22 IST)
Updated Date: Thu, 31 May 2018 (11:30 IST)
நிருபர்களை அவமதிக்கும் விதமாக பேசிய நடிகர் ரஜினிக்கு பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனத்தை தெரிவித்ததோடு, அவருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் நேற்று தூத்துக்குடி சென்றார். அதன் பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் மிகவும் கோபமாக பேசினார்.
ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாற சமூக விரோதிகள் போராட்டக்காரர்களாக ஊடுருவியதே காரணம் என்றும் எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்தால் தமிழ்நாடே சுடுகாடாகும் என்றும் பேசினார். மேலும், காவல்துறையினரை தாக்கிய பின்னரே அங்கு பிரச்சனை தொடங்கியது எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும், ஒரு கட்டத்தில் கோபமடைந்த ரஜினி ‘ஏய்.. ஏய்.. வேறேதேனும் கேள்வி இருக்கா?” என கோபமாக கேள்வி எழுப்பினார்.
ரஜினியின் இந்த கோபம் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. தினமும் தியானம் செய்யும், இமயமலைக்கெல்லாம் சென்று தியானம் செய்யும் ரஜினி, நிருபர்கள் 2 கேள்விகள் கேட்டதில் இவ்வளவு கோபப்படலாமா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், பத்திரிக்கையாளர்களிடம் ரஜினி இப்படி நடந்து கொண்டதற்கு பத்திரிக்கையாளர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.