Publish Date: Mon, 09 Dec 2019 (21:11 IST)
Updated Date: Mon, 09 Dec 2019 (21:13 IST)
இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அவருடைய பிறந்த நாளுக்கு பிரதமர் மோடி உள்பட பல்வேறு தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேல்மட்ட தலைவர்கள் சோனியா காந்தியின் பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அதற்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்கள் டுவிட்டரில் மோதிக் கொண்ட சம்பவம் இன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சோனியா காந்தி பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டரில் ஒரு பதிவை பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் பாஜகவின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் ’நாட்டின் முதல் மிகப்பெரும் ஊழலாம் போபர்ஸ் ஊழல் செய்து தலைகுனிவை ஏற்படுத்திய காங்கிரஸ் கட்சியின் சேவையை மக்கள் புறக்கணித்ததை நினைவு கூறும் நாள் இன்று’ என பதிவு செய்திருந்தது.
இந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஜோதிமணி எம்பி தனது டுவிட்டரில், ‘போபர்ஸ் வழக்கில் எந்த வித தவறும் நடக்கவில்லை என்று நீதிமன்ற உத்தரவை ஏற்று கொண்டு வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சி மேல்முறையீடு செய்யப் போவதில்லை என்று முடிவு செய்தது. இது கூட தெரியாமல் தமிழக பாஜக இருக்கின்றதே என்று வேதனையுடன் குறிப்பிட்டிருந்தார்
இதற்கு பாஜகவின் ட்விட்டர் தளம் எந்தவித பதிலையும் கூறவில்லை என்றாலும் நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். போபர்ஸ் ஊழல் நடக்கவில்லை என நீதிமன்றம் கூறியது போலவே ரபேல் விஷயத்திலும் ஊழலே நடக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் கூறியது. ஆனால் அதன்பிறகும் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஊழல் குறித்து கூப்பாடு போட்டது ஏனோ? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த கேள்விக்கு ஜோதிமணி எந்தவித பதிலையும் தெரிவிக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது