Publish Date: Tue, 19 Nov 2019 (08:10 IST)
Updated Date: Tue, 19 Nov 2019 (08:12 IST)
தமிழக அரசியலில் எந்த அதிசயம் வேண்டுமானாலும் நடக்கலாம் எனக் கூறிய ரஜினிக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த கமல் 60 பாராட்டு விழாவில் பேசிய ரஜினி, ’ இரண்டு ஆண்டுகள் முன்பு முதல்வர் ஆவேன் என எடப்பாடி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார், ஆனால் அதிசயம் நடந்தது. நான்கைந்து மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துடும் என 99% மக்கள் சொன்னார்கள். அதிசயம் நடந்தது, அற்புதம் நடந்தது. எல்லா தடையை மீறி தொடர்ந்துகொண்டிருக்கு. தமிழக அரசியலில் நேற்றும் அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் நடந்தது, நாளையும் நடக்கும்’ எனக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார்.
இதனால் வெறும் அதிசயத்தால் மட்டுமே எடப்பாடி முதல்வாரானாரா எனக் கோபம் கொண்ட அதிமுகவினர் ரஜினியை விமர்சனம் செய்து வருகின்றனர். இது சம்மந்தமாக அமைச்சர் ஜெயக்குமார் ‘நடிகர் ரஜினிகாந்த் வேண்டுமானால் அதிசயத்தை நம்பலாம் நாங்கள் மக்கள் மற்றும் வாக்காளர்களை மட்டுமே நம்பி உள்ளோம். 2021 ஆம் ஆண்டு நடைபெறும் பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். நாங்கள் ஆட்சி அமைப்பதைதான் ரஜினிகாந்த் அதிசயம் என்று கூறியிருக்கலாம் ‘ என கேலி செய்யும் விதமாகப் பேசியுள்ளார்.