Publish Date: Thu, 16 Jun 2022 (14:32 IST)
Updated Date: Thu, 16 Jun 2022 (14:33 IST)
ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும் அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை என ஜெயகுமார் பேட்டி.
அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில் சமீப காலமாக எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து சமீபத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விரைவில் அதிமுக ஒற்றை தலைமையின் கீழ் செயல்படும் என பேசியிருந்தார். மேலும் பல அதிமுக பிரபலங்களும் ஒற்றை தலைமை குறித்து பேசி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இன்று காலை எடப்பாடி பழனிசாமி, சிவி சண்முகம், ஜெயக்குமார் உள்ளிட்ட எடப்பாடியார் அணியினர் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தி விவாதித்து வந்தனர். அப்போது தலைமை அலுவலகத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் வந்ததால் உடனடியாக எடப்பாடியார் அணியினர் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியதாக கூறப்படுகிறது.
மேலும் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய ஜெயக்குமார் கார் மீது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் வந்ததால் உடனடியாக எடப்பாடியார் அணியினர் கூட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பியதாக கூறப்பட்டதை மறுத்துள்ளார் ஜெயகுமார்.
மேலும் அவர் கூறியதாவது, ஓபிஎஸ் கட்சி அலுவலகம் வருகைக்கும் அதிமுக தீர்மான குழு கூட்டம் நிறைவுக்கும் சம்பந்தமில்லை. அதிமுக தீர்மான குழு கூட்டம் ஜூன் 18 ஆம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்துள்ளார்.