Publish Date: Tue, 10 Dec 2019 (10:50 IST)
Updated Date: Tue, 10 Dec 2019 (10:54 IST)
திமுக ஒரு குழப்பமான கட்சி எனவும், ஸ்டாலின் ஒரு குழப்பவாதி எனவும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சமீபத்தில் புதிய மாவட்டங்களுக்கான தொகுதி மறுவரையறை செய்யப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் புதிய மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் 9 புதிய மாவட்டங்கள் தவிர்த்து ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அறிவித்தது. இதனையடுத்து உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பயன்படுத்தப்படவில்லை என மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தது திமுக.
இதனை குறித்து அதிமுகவினர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலை கண்டு அச்சம் கொள்கிறார் என விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், “எப்படி இருந்த திமுக, தற்போது இப்படி ஆகிவிட்டது. திமுக ஒரு குழப்பவாதி கட்சி, ஸ்டாலின் ஒரு குழப்பவாதி” என விமர்சித்துள்ளார்.
மேலும் ”முக ஸ்டாலினின் குழப்பத்துக்கு அவரது முதல்வர் கனவே காரணம், நித்தியானந்தா போல் தனி தீவு வாங்கி வேண்டுமானால் அவர் முதல்வர் ஆகலாம், ஆனால் தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுகவின் ஆட்சி தான்” எனவும் அவர் ஜெயகுமார் கூறியுள்ளார்.