அபேஸ்! எல்ஐசி முகவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை
, புதன், 14 செப்டம்பர் 2016 (04:09 IST)
சென்னையில் எல்ஐசி முகவர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை போயுள்ளது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை அருகே உள்ள முகப்பேர் கிழக்கு பகுதியில் 4வது பிளாக்கில் வசிப்பவர் சாம்ராஜ் (54). இவர் எல்ஐசி முகவராக இருக்கிறார். இவரது மனைவி ஜெயராணி ஜான்சிமேரி (50). இவர்களது மகன் ரெனோ (35). இவருக்கு திருமணமாகி விட்டது. இவரது மனைவி ஆசிரியை ஆக வேலை செய்கிறார். அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றனர்.
இந்நிலையில் ஜான்சிமேரிக்கு உடல்நிலை சரியில்லாததால் திங்கட்கி ழமை அவரை தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் இரவு வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் கதவு பூட்டிய நிலையிலேயே இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஆரம், செயின், வளையல், நெக்லஸ் உள்ளிட்ட 100 சவரன் நகைகள் காணவில்லை. இவை அனைத்தும் ரெனோவின் மனைவிக்கு சொந்தமானவை.
இதனால் அதிர்ச்சியடைந்த சாம்ராஜ் குடும்பத்தினர் வீட்டில் இருந்த மற்றொரு பீரோவை திறந்து பார்த்தனர். அதில் ஜான்சிமேரியின் நகைகள் 50 சவரன் அப்படியே இருந்தன. ஒரு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் ஜான்சிமேரி புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்