சென்னை ஆர்.கே.நகரில் உள்ள நகைக்கடையில், மயிலாடுதுறையை சேர்ந்த 2 பெண்கள் நகை வாங்குவது போல் நடித்து நகைகளை திருடியுள்ளனர்.
சென்னை ஆர்.கே.நகர் எண்ணூர் நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்தவர் பாபுலால்(44). இவர் தன்னுடைய வீட்டின் கீழ் பகுதியில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று 2 பெண்கள் நகை வாங்குவதற்காக வந்தனர்.
மூக்குத்தி நகைகளை பார்த்து கொண்டிருந்த அவர்கள் இருவரும் நகைகள் பிடிக்கவில்லை என்று கடையில் இருந்து சென்றுவிட்டனர். அவர்கள் சென்றவுடன் நகைகளை சரி பார்த்த பாபுலால் அதிர்ச்சி அடைந்தார். அதில் இருந்து 32 கிராம் மதிப்புள்ள 16 மூக்குத்திகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.
உடனடியாக அந்த பெண்களை பின் தொடர்ந்து சென்ற பாபுலால் ரோந்து பணியில் இருந்த ஆர்.கே.நகர் காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தார். காவல் துறையினர் அந்த பெண்களை மடக்கி பிடித்து பெண் காவலாளி உதவியுடன் சோதனை செய்தனர். சோதனையில், அவர்களிடம் 16 மூக்குத்திகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மயிலாடுதுறை பகுதியை சேர்ந்த சுதா(35), லோகநாயகி(44) என தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.