முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் கோரிக்கையை தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கும் போது வைப்பார் என தகவல்கள் வருகின்றன.
கடந்த சனிக்கிழமை பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி, சென்னையில் பேரணி நடைபெற்றது. இதில், பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கலந்து கொண்டார். இந்த பேரணியில் கோட்டை வரை சென்று முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த பேரணியில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நாம் தமிழர் கட்சி சீமான், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, இயக்குனர் சங்க தலைவர் விக்ரமன், நடிகர்கள் தியாகு, சத்யாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பேரணி முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள் “ என் மகன் ஏற்கனவே பாதி நோயாளி ஆகிவிட்டார். எனவே அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் ஜெயலலிதா அவரையும், மற்றவர்களையும் அவர் விடுதலை செய்ய வேண்டும்.
அவர் அதை செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. என் மகன் ஒவ்வொரு நொடியும் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். நான் கொடுத்த மனுவை முதல்வரின் பார்வைக்கு கொண்டு செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
இந்நிலையில் நாளை பிரதமரை சந்திக்க இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த விவகாரம் குறித்து பேசுவார் எனவும், முதல்வரின் டெல்லி பயணத்தில் ஏழு பேரின் விடுதலை பற்றிய கோப்பும் இடம் பெற்றிருக்கிறது என்கிறார் தலைமைச் செயலக வட்டார தகவல்கள் கூறுகின்றன.