Publish Date: Thu, 19 May 2016 (16:23 IST)
Updated Date: Thu, 19 May 2016 (16:26 IST)
தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா வரும் 23-ஆம் தேதி பதவியேற்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதன் மூலம் ஜெயலலிதா ஆறாவது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார்.
17-வது சட்டப்பேரவைக்கான தேர்தல் கடந்த 16-ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆரம்பம் முதலே முன்னணியில் இருந்த அதிமுக திமுகவை விட அதிக இடங்களில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. இதன் மூலம் அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைக்கப்போவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.
இதனையடுத்து பிரதமர் மோடி, ஆளுநர் ரோசையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவுக்கு நன்றி கூறியுள்ளனர். மகத்தான வெற்றியை அளித்த தமிழக மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தனது நன்றியை கூறியுள்ளார்.
இந்நிலையில் வரும் 23-ஆம் தேதி தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்க இருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதிமுக தரப்பில் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்தல் முடிவு முழுமையாக வெளியான பின்னர் இந்த அறிவிப்பு வெளியாகும் என அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.