ஜெயலலிதாவால் எழுந்து உட்கார முடிகிறதா?: பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தகவல்!
ஜெயலலிதாவால் எழுந்து உட்கார முடிகிறதா?: பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தகவல்!
Publish Date: Mon, 07 Nov 2016 (09:03 IST)
Updated Date: Mon, 07 Nov 2016 (09:10 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவருக்கு எழுந்து உட்கார பயிற்சிகள் அளிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதா தற்போது அவரது டிஸ்சார்ஜை அவரே தீர்மாணிக்கும் நிலைக்கு முன்னேறியுள்ளார். அவருக்கு தேவையான பிடித்த உணவை கேட்டுப்பெறுகிறார் உள்ளிட்ட பல தகவல்கள் மருத்துவமனை வட்டாரத்தில் இருந்து வருகின்றன.
சமீபத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்துக்கு பதிலாக கைரேகை வைத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து கையெழுத்து போடும் அளவுக்கு முதல்வரின் உடல்நிலை இல்லையா என்ற கேள்விகளும் எழுந்தன.
இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பல்வேறு பிஸியோதெரபி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. தொடர் சிகிச்சையில் இருப்பதால் அவருக்கு கை, கால்களில் பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் ஜெயலலிதா தானாக எழுந்து உட்காருவதற்கு, நடப்பதற்கு பயிற்சிகள் அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பயிற்சிகள் சிகிச்சைக்கு பின்னர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.