தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பற்றி அவதூறான குற்றாச்சாட்டை சுமத்தியுள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 30-ஆம் தேதி தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான நிகழ்ச்சியில் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக ஆளுநர் ரோசையா, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் பணம் பெற்றதாக குற்றம் சாட்டினார், மேலும் கூறிய இளங்கோவன் ஆளுநர் வாங்கிய பணத்தில், ஒரு பகுதியை எடுத்துக் கொண்டு, மீதியை முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொடுத்ததாகவும் குற்றம் சாட்டினார்.
ஏற்கனவே இளங்கோவனின் இந்த சர்ச்சை பேட்டி தொடர்பாக ஆளுநர் அவதூறு வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதா சார்பிலும் இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இளங்கோவனின் இந்த குற்றச்சாட்டு, ஆதாரமற்ற, உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு எனவும், வேண்டுமென்றே அவர் உள்நோக்கத்துடன் அவதூறான குற்றச்சாட்டை பரப்புகிறார் என கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கிரிமின்ல அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.