Publish Date: Mon, 25 Jan 2021 (08:32 IST)
Updated Date: Mon, 25 Jan 2021 (08:46 IST)
ஜனவரி 28 ஆம் தேதி சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லம் திறப்பு.
தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் முன்னாள் பொது செயலாளருமான ஜெயலலிதாவின் வேதா இல்லம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. அவர் இறந்து சில ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரது வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் இயற்றியது.
இதன் மூலம் வேதா இல்லம் மற்றும் அதில் உள்ள பொருட்கள் யாவும் அரசுடமையாக்கப்படும். மேலும், ஜெயலலிதா குறித்த வேறு சில நினைவு புகைப்படங்கள் போன்றவற்றையும் இணைத்து, அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் வேதா இல்லம் மக்கள் சுற்றி பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜனவரி 28 ஆம் தேதி சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா நினைவு இல்லம் திறந்து வைக்கப்படவுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதனை திறந்து வைத்ததும் பின்னர் பொதுமக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.