தீபா பங்கேற்கும் பிரம்மாண்ட மாநில மாநாடு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ தகவல்!
தீபா பங்கேற்கும் பிரம்மாண்ட மாநில மாநாடு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ தகவல்!
Publish Date: Mon, 30 Jan 2017 (13:10 IST)
Updated Date: Mon, 30 Jan 2017 (16:11 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வரும் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று புதிய கட்சி குறித்து அறிவிப்பதாக கூறியிருந்தார். அன்றைய தினம் பிரம்மாண்ட மாநில மாநாடு நடைபெறும் என்ற தகவல் வந்துள்ளது.
அதிமுக தலைமை பதவியான பொதுச்செயலாளர் பதவியை சசிகலா பெற்றிருப்பதை பெரும்பாலான அதிமுகவினர் விரும்பவில்லை. இதனையடுத்து அதிருப்தி அதிமுகவினர் பலர் தீபாவை தலைமை ஏற்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பல முன்னாள் எம்எல்ஏக்கள் தங்கள் ஆதரவை தீபாவுக்கு அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் மாநில மாநாடு நடைபெறும் என அரியலூர் அதிமுக முன்னாள் எம்எல்ஏ பொன்.ப.இளவழகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் மக்களால் சகித்துக்கொள்ள முடியாத நிகழ்வுகள் ஆட்சியிலும், கட்சியிலும் நடைபெற்று வருகிறது. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுகவில், 2600 பேர் மட்டுமே ஒரு நபரை பொறுப்பு பொதுச்செயலாளராக நியமித்துள்ளனர்.
சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை உண்மையான தொண்டர்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. பெரும்பாலான தொண்டர்கள் ஜெ.தீபாவுக்கு ஆதரவாக உள்ளனர். திருச்சியில் பிப்ரவரி 24-ஆம் தேதி ஜெ.தீபா கலந்துகொள்ளும் பிரம்மாண்ட மாநில மாநாடு நடைபெற உள்ளது. மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலில் ஜெ.தீபா நிறுத்தும் வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என அவர் கூறினார்.