Publish Date: Tue, 14 Nov 2017 (10:25 IST)Updated Date: Tue, 14 Nov 2017 (10:51 IST)
கல்லூரி மாணவர்கள் வங்கிக் கணக்கில் சசிகலா குடும்பத்தினர் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்து வந்த விவகாரம் வருமான வரித்துறை சோதனை மூலம் தெரியவந்துள்ளது.
சசிகலா மற்றும் அவரின் குடும்பத்தினர் பல் ஆண்டுகளாக தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். போலி நிறுவனங்ளை துவங்கி, லஞ்சம் மற்றும் ஊழல் பணத்தை பதுக்கி, பினாமி பெயரில் சொத்துக்கள் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.
அதற்கான ஆதாரங்களை சேகரித்த வருமான வரித்துறை கடந்த 9ம் தேதி முதல் சென்னை, தஞ்சை, திருச்சி உள்ளிட்ட பல இடங்களில் வசிக்கும் சசிகலா குடும்பதினரின் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதற்கு ஆபரேஷன் கிளீன் மணி என பெயர் வைத்தனர்.
இந்த சோதனையில் சசிகலா குடும்பம் பல நிறுவனங்களின் பெயரில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடாக சேர்த்தது தெரிய வந்ததாகவும், அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் செய்திகள் வெளியாகின. மேலும், பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது. மொத்தமாக ரூ.1500 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், கிலோக்கணக்கில் தங்க, வைரை நகைகள் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூட்டை மூட்டையாக சிக்கிய ஆவணங்களை மதிப்பிடும் பணிகளில் தற்போது 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மன்னார்குடியில் வசிக்கும் சில கல்லூரி மாணவர்கள் வங்கிக் கணக்கில் பல கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக திவாகரனிடம் அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர்.