Publish Date: Thu, 05 Mar 2020 (19:10 IST)
Updated Date: Thu, 05 Mar 2020 (19:12 IST)
சிஏஏ குறித்து இஸ்லாமிய அமைப்புகள் கமல்ஹாசனை சந்தித்த நிலையில், இந்திய மக்களின் ஒற்றுமைக்கு உறுதுணையாக இருப்பேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
சிஏஏ குறித்து ஆதரவாக பேசிய ரஜினிகாந்தை பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் சந்தித்து பேசினர். இதனை தொடர்ந்து, பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்தனர்.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தை சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கமல்ஹாசனை சந்தித்து பேசினர். கேரள முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம் அஷோசியேஷனை சேர்ந்தவர்களும் கலந்துக் கொண்டனர்.
சிஏஏக்கு எதிராக முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு கமல்ஹாசனிடம் நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு உங்களது ஆதரவு வேண்டும் என கமல்ஹாசனைக் கேட்டுக் கொண்டனர். மேலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின் ஒற்றுமைக்கும் உறுதுணையாக இருப்பேன் என கமல் வாக்குறுதி அளித்தார்” என குறிப்பிட்டுள்ளது.