Publish Date: Wed, 03 Aug 2016 (11:47 IST)
Updated Date: Wed, 03 Aug 2016 (11:50 IST)
மாநிலங்களவையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தன்னை அடித்தார் எனவும், பதவி விலக வற்புறுத்தினார் எனவும் கூறி தேசிய மற்றும் மாநில ஊடகங்களின் கவனத்தை பெற்றார் சசிகலா புஷ்பா.
சசிகலா புஷ்பா மாநிலங்களவையில் இப்படி நடந்துகொண்டதின் பின்னணியில் தாதுமணல் விவகாரம் இருக்கலாம் என தென் மாவட்ட அதிமுக பிரமுகர்கள் சந்தேகத்தை கிளப்புகிறார்கள். தாதுமணலை அரசே ஏற்று நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த தொழிலில் கொடிகட்டி பறந்த வைகுண்ட ராஜன் மற்றும் பல தாதுமணல் புள்ளிகளுக்கு இதனால் பல கோடிகள் இழப்பு ஏற்பட உள்ளது.
இதனால் இந்த விவகாரத்தில் தமிழக அரசை பணியவைக்க அந்த புள்ளிகள் சசிகலாவை கருவியாக பயன்படுத்தி இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வைகுண்ட ராஜனின் செயல்பாடுகள் கடந்த காலங்களில் ஜெயலலிதாவுக்கு பிடிக்காமல் போக இருவருக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்நிலையில் தாதுமணலை அரசே ஏற்று நடத்தும் என தமிழக அரசு அறிவித்தது.
முதல்வர் ஜெயலலிதாவுடன் சமரசம் பேச முயற்சித்தும் அது முடியாமல் போனது. டெல்லியில் கனிம வள அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டும் அது முடியாமல் போனது. இந்நிலையில் வைகுண்டராஜனின் ஆசியுடன் அரசியலில் நுழைந்த சசிகலா புஷ்பாவை பயன்படுத்தி தமிழக அரசை பணியவைக்க நடத்தப்பட்ட நாடகம் என நெல்லை அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. தாதுமணல் புள்ளிகள் சசிகலா புஷ்பாவை ஒரு அம்பாக எய்துள்ளனர் என அவர்கள் சந்தேகத்தை எழுப்புகின்றனர்.