ஜெயலலிதா இரட்டை விரலைக்காட்டுவதற்கு, சேலத்திலே இருவர் இறந்துவிட்டனர், விருத்தாசலத்திலே இருவர் இறந்துவிட்டனர் என்று அர்த்தம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மதுரை மத்தியத் தொகுதி வேட்பாளர் சிவமுத்துக்குமார் (தேமுதிக) வடக்குத் தொகுதி வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் (தேமுதிக), தெற்குத் தொகுதி வேட்பாளர் பூமிநாதன் (மதிமுக), மேற்குத் தொகுதி வேட்பாளர் உ.வாசுகி (சிபிஎம்), கிழக்குத் தொகுதி வேட்பாளர் பா.காளிதாசன் (சிபிஐ), மேலூர் தொகுதி வேட்பாளர் பாரத் நாச்சியப்பன் (தமாகா), சோழவந்தான் தொகுதி வேட்பாளர் பாண்டியம்மாள் (விடுதலைச்சிறுத்தைகள்) ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய விஜயகாந்த், ”தமிழக முதல்வராக இருந்து மறைந்த எம்.ஜி.ஆர். இரட்டை விரலைக் காட்டி இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். இன்றைக்கு ஜெயலலிதாவும் இரட்டை விரலைக்காட்டி வாக்கு கேட்கிறார்.
அதற்கு என்ன அர்த்தம்?.. சேலத்திலே இருவர் இறந்துவிட்டனர்... விருத்தாசலத்திலே இருவர் இறந்துவிட்டனர்... என்று அர்த்தம். ஜெயலலிதா கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் மதிப்பு வெறும் 3 லட்சம் ரூபாயும், நான்கு லட்சம் ரூபாயும் தான்.
தமிழக முதல்வர் பிரச்சாரக் கூட்டங்களில், சொல்லாததையும் செய்துவிட்டதாகக் கூறுகிறார். கூட்டத்திற்கு வந்த தொண்டர்களின் உயிர் போனதுதான் அவர் சொல்லாமல் செய்த சாதனை.
அதிமுகவும், திமுகவும் உளவுத்துறையை நம்பியிருக்கின்றன. ஆனால் நாங்கள் மக்களை நம்பியிருக்கிறோம். எங்களுக்கு மக்கள்தான் உளவுத்துறை. மக்கள் எங்களுடன் நெருக்கமாக உள்ளார்கள்.
மக்களுக்காக தாம் இருப்பதாகக் கூறும் முதல்வர், சிறுதாவூர் பங்களாவை மக்களுக்கு எழுதிக்கொடுக்கத் தயாரா? மிடாஸ் மதுபான ஆலைகளின் லாபத்தைக் கூறத்தயாரா?
மக்கள் என்ற கிங் தான் தேர்தலில் எங்களை தேர்வு செய்ய உள்ளனர். விரோதிகளைக் கூட மன்னிக்கலாம். தமிழகத்திற்கு துரோகம் செய்த அதிமுக, திமுகவை மன்னிக்கவே கூடாது. அதிமுக, திமுக கட்சிகளிடம் முரட்டுப் பணம் உள்ளது. ஆனால் எங்களிடம் மக்கள் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவது உறுதி. எங்களது ஆட்சியில் தவறுகள் நடக்காது. தவறுகள் நடந்தால் தட்டிக்கேட்போம்” என்று கூறியுள்ளார்.