Publish Date: Tue, 17 Oct 2017 (13:24 IST)
Updated Date: Tue, 17 Oct 2017 (13:27 IST)
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்தவும் குணமாக்கவும் தமிழக அரசே பல்வேறு இடங்களில் நிலவேம்பு குடிநீரை அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி பல்வேறு சமூக அமைப்புகள், நடிகர்களின் ரசிகர்கள், அரசியல் கட்சிகள் ஆகியோர்களும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நிலவேம்பு குடிநீர் உண்மையில் டெங்குவை போக்குமா? இந்த நீரை காய்ச்சல் இல்லாதவர்கள் குடித்தால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று ஒருசிலர் சமூக இணையதளங்களில் வதந்தி பரப்பி வருகின்றனர். இந்த நிலையில் இதுகுறித்து மருத்துவர், அமைச்சர், அதிகாரி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
மருத்துவர் கு.சிவராமன்: நிலவேம்பு குடிநீரில் 9 மூலிகைகள் உள்ளன. நிலவேம்பு குடிநீரை தயாரித்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும். நிலவேம்பு குடிநீரை குடிப்பதால் மலட்டுத்தன்மை ஏற்படும் என்று எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை' என்று கூறினார்
அமைச்சர் விஜயபாஸ்கர்: நிலவேம்பு குடிநீரை இந்தியா முழுவதும் விநியோகிக்க தமிழகம் வந்த மத்தியக் குழு பரிசீலனை செய்துள்ளதால் இதனால் எந்தவித பக்கவிளைவும் இருக்க வாய்ப்பே இல்லை. பொதுமக்கள் எந்த அச்சமும் இல்லாம் நிலவேம்பு கசாயத்தை பருகலாம்
சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்: நிலவேம்பு குறித்து சமூகவலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். மத்திய அரசின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் எந்த பக்கவிளைவும் இல்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது