Publish Date: Mon, 12 Jun 2017 (12:24 IST)
Updated Date: Mon, 12 Jun 2017 (12:29 IST)
இசை உலகம் சிதைந்து விட்டதாக இசைஞானி இளையராஜா உருக்கமான கருத்து தெரிவித்துள்ளார்.
தனது இசைக்குழுவில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் பாடகர்-பாடகிகளை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு இளையராஜா நேற்று ஏற்பாடு செய்திருந்தார். இந்த சந்திப்பு சென்னை வடபழனியில் உள்ள அவரது ரிக்கார்டிங் தியேட்டரில் நடந்தது. அப்போது, இசைக்கலைஞர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்கள்.
அந்த நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது:
நான் திரைப்படங்களுக்கு இசைமைக்க வந்து 40 வருடங்கள் ஆகிவிட்டது. இனிமேல் முழு இசைக்கலைஞர்களும் ஒன்றாக அமர்ந்து பாடகர், பாடகிகளுடன் பாடி இசையமைத்து, அதை ஒலிப்பதிவு செய்வது என்பது நடக்கப்போவதில்லை. அந்த காலகட்டம் முடிந்துவிட்டது.
அப்படி இசையமைப்பவர்கள் யாரும் தற்போது இங்கு இல்லை. வாசிப்பவர்களும் இல்லை. பாடுபவர்களும் இல்லை. சினிமாவில் கையை காலை ஆட்டுவது போல் ஏதோ கடமைக்கு செய்கிறார்கள். பாடல்களுக்கான டியூன் இல்லை.
இந்த உலகத்தில் உன்னதமான விஷயம் இசை. எத்தனை ராகங்கள், எத்தனை வாத்திய கருவிகள், தாளங்கள் என அனைத்தும் போய்விட்டன. திருப்பதிக்கு போய் மொட்டி அடித்து விட்டது போல் இசையும் போய்விட்டது. மொட்டையோடு சேர்த்து புருவத்தையும் எடுத்துவிட்டார்கள். இந்தியா முழுவதும் இசை உலகம் சிதைந்துவிட்டது என அவர் வருத்தத்துடன் தெரிவித்தார்.