Publish Date: Wed, 22 Feb 2017 (13:53 IST)
Updated Date: Wed, 22 Feb 2017 (13:57 IST)
சமீபகாலமாக நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில், அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகள் குறித்து தனது கருத்தை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கும், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசுவாமிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியது. தமிழர்களை பொறுக்கி எனவும், கமல்ஹாசனை படிப்பறிவில்லாத முட்டாள் எனவும் சுப்பிரமணியசுவாமி விமர்சித்தார். இதற்கு, நெட்டிசன்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.
அதேபோல், அரசியல் பற்றி கமலுக்கு என்ன தெரியும் என அமைச்சர் செங்கோட்டையன் கருத்து தெரிவித்திருந்தார். மேலும், மக்களை வன்முறைக்கு தூண்டும் விதமாக கமல் கருத்து தெரிவிக்கிறார் என அவர் மீது அதிமுக சார்பில் போலீசாரிடம் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. மேலும், அவரின் நற்பணி மன்ற இயக்க பொறுப்பாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இதுபற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் “ இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது” என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் சில கருத்துகளையும் பதிவு செய்துள்ளார்.