உங்கள் அன்பால் மீண்டு விட்டேன் : கமல்ஹாசன் உருக்கம்
உங்கள் அன்பால் மீண்டு விட்டேன் : கமல்ஹாசன் உருக்கம்
சில வாரங்களுக்கு முன்பு, ஆழ்வார்பேட்டையிலுள்ள அலுவலக மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததில் நடிகர் கமல்ஹாசனுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
உடனடியாக அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
சில தினங்கள் முன்பு, காந்தியார் போல் இருவர் உதவியுடன் நடந்தேன் என்று கமல் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவே, சில நாட்களுக்கு முன்பு அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
எனினும், மேலும் சில வாரங்கள் அவர் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், அவர் தன்னுயை டிவிட்டர் பக்கத்தில் “நவம்பர் மாதத்திலிருந்து நான் என்னுடைய வேலையை தொடங்கலாம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். எல்லோருடைய அன்பாலும் விரைவில் குணமடைந்துவிட்டேன். எல்லோருக்கும் நன்றி. சபாஷ் நாயுடு திரைப்படம் மூலம் அந்த அன்பை திருப்பித் தருவேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.