Publish Date: Thu, 10 May 2018 (08:13 IST)
Updated Date: Thu, 10 May 2018 (10:08 IST)
தமிழகத்தில் உள்ள விவசாய பகுதிகளில் ஒன்றான நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அந்த பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தனர். திரையுலகினர், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் கொடுத்த தொடர்ச்சியான எதிர்ப்பு காரணமாக நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ஜெம் நிறுவனம் கைவிட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
ஜெம் நிறுவனம் சமீபத்தில் மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாகவும், அதில் நெடுவாசலுக்கு பதிலாக வேறு இடம் வழங்கக்கோரி கேட்டுக்கொண்டுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் வெளிவந்துள்ளது. இது தமிழர்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது.
இருப்பினும் நெடுவாசலுக்கு பதிலாக மத்திய அரசு வழங்கவிருக்கும் மாற்று இடம் தமிழகத்தின் ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் மீண்டும் போராட்டம் வெடிக்கும் என்று கருதப்படுகிறது. எனவே மத்திய அரசு ஜெம் நிறுவனத்திற்கு வேறு மாநிலங்களில்தான் இடம் ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.