Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”சினிமாக்காரன் கமல்ஹாசன் கூறியது முட்டாள்தனமானது” - சுப்பிரமணிய சாமி கொக்கரிப்பு

”சினிமாக்காரன் கமல்ஹாசன் கூறியது முட்டாள்தனமானது” - சுப்பிரமணிய சாமி கொக்கரிப்பு
, செவ்வாய், 24 ஜனவரி 2017 (19:44 IST)
போராட்டக்காரர்களை முதலமைச்சர் சந்தித்து இருக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளது எவ்வளவு முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.


 

தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர சட்டம் இயற்ற கோரியும், பீட்டா அமைப்பிற்கு தடை விதிக்கக் கோரியும், காட்சிப்படுத்தக்கூடாத பட்டியலில் இருந்து காளையை நீக்க வலியுறுத்தியும் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக லட்சக்கணக்கான மாணவர்களும், இளைஞர்களும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர்.

லட்சக்கணக்கானவர்கள் பகலிலும், இரவிலும் சென்னை மெரீனா, கோவை வ.உ.சி. மைதானம், மதுரை தமுக்கம் மைதானம் உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் ஞாயிற்றுக்கிழமை அவசரச் சட்டம் இயற்றப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

இதற்கிடையில், தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக, அமைதியான முறையில் போராடியவர்கள் மீது, தமிழக அரசு காவல்துறை மூலம் வன்முறையை கட்டவிழ்த்து விட்டது. அறவழியில் போராடியவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளனர்.

பல இடங்களில் மாணவர்கள், இளைஞர்களின் மண்டைகள் உடைந்தன. போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். பெண்கள் என்று பார்க்காமல் காவல் துறையினர் ஆவேசமாக தாக்கியுள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல், ”போராட்டக்காரர்கள் மீது சமூகவிரோதிகள் என்ற முத்திரையைக் குத்த வேண்டாம். போராட்டக்காரர்களை முதலமைச்சர் சந்தித்திருக்க வேண்டும் என்று” கூறியிருந்தார்.

இதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “போராட்டக்காரர்களை முதலமைச்சர் சந்தித்து இருக்க வேண்டும் என்று சினிமாக்காரன் கமல்ஹாசன் கூறியுள்ளது எவ்வளவு முட்டாள்தனமானது. மதுரைக்கு முதலமைச்சர் சென்றபோது எங்கு என்ன நடந்தது?” என்று பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’இந்தியா உங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்’: தமிழர்களை போற்றிப் புகழும் கட்ஜூ!