Publish Date: Tue, 24 Oct 2017 (16:44 IST)
Updated Date: Tue, 24 Oct 2017 (16:55 IST)
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, ஒரு துப்புரவு பணியாளர் மருத்துவம் செய்த சம்பவம் மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் டெங்கு நோய் தாக்கம் காரணமாக, தினமும் 5 பேருக்கு மேல் பலியாகி வருகின்றனர். எனவே, காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலிருக்கும் அரசு மருத்துவமனையை அணுகுமாறு அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், அரசு சுகாதார மையம் மற்றும் மருத்துவமனைகளில் போதிய மருத்துவர்கள் இல்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதை நிரூபிக்கும் வகையில் மதுரை வேலூரில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேலூரில் உள்ள கருங்காலக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, இன்று காலை காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு சிறுவன் தனது தந்தையுடன் வந்திருந்தான். அப்போது அங்கு பணியில் எந்த மருத்துவரும் இல்லை.
எனவே, அங்கிருந்த துப்புரவு பணியாளர் பொன்னுதாயி என்பவர் அந்த சிறுவனுக்கு ஊசி போட்டு, சில மாத்திரைகளை அவனது தந்தையிடம் கொடுத்தார். அனுபவ மருத்துவர் போல் அவர் ஊசி போடுவது, மாத்திரையை தேர்ந்தெடுத்து கொடுப்பதையும் பார்த்தால், மருத்துவர் இல்லாத நேரத்தில் சிகிச்சை அளிக்க பயிற்சி கொடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பல தொலைக்காட்சிகள் இந்த வீடியோவை வெளியிட்டு வருகின்றன.
பட உதவி - புதிய தலைமுறை தொலைக்காட்சி