Publish Date: Fri, 20 Sep 2024 (07:50 IST)
Updated Date: Fri, 20 Sep 2024 (07:52 IST)
சென்னையில் இந்தியா - வங்கதேசம் இடையிலான கிரிக்கெட் தொடரை உடனடியாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமை தாங்கினார். செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வங்கதேச மக்களை பாகிஸ்தான் அடக்குமுறைக்கு உள்ளாக்கியபோது, இந்திய ராணுவம் தலையிட்டு வங்கதேசம் என்ற நாட்டை உருவாக்க உதவியது. அப்போது அங்கு 26 சதவீதம் இந்துக்கள் இருந்தனர், இன்று அந்த எண்ணிக்கை 7 சதவீதமாக குறைந்துள்ளது, மேலும் அவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்" என்றார்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் வங்கதேசத்துடன் போட்டி நடத்துவது அசிங்கமானது, எனவே உடனடியாக தொடரை தடை செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதன்பின், இந்து மக்கள் கட்சியினர் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய கோரி, கிரிக்கெட் வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகே சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.