Publish Date: Wed, 10 Aug 2022 (13:45 IST)
Updated Date: Wed, 10 Aug 2022 (14:11 IST)
மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வட தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.
காற்று திசை வேறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் குறிப்பாக தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்நிலையில் இன்று இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவலின் படி, மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று வடதமிழக மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதோடு நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.