Publish Date: Wed, 01 Apr 2020 (17:56 IST)
Updated Date: Wed, 01 Apr 2020 (17:58 IST)
தமிழகத்திற்கு 500 வெண்ட்டிலேட்டர்களை தந்த பிரபல ஐடி நிறுவனம்
கொரோனா வைரசுக்கு எதிராக தமிழக அரசு கடந்த சில நாட்களாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள் தமிழக அரசுக்கு நிதி உதவி மற்றும் தேவையான உபகரணங்களை கொடுத்து உதவி செய்து வருகின்றன
இந்த நிலையில் 37.5 கோடி மதிப்புள்ள 500 வெண்ட்டிலேட்டர்களை கொரோனா வைரசால் உண்டாகின்ற மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு அரசுக்கு அளிக்க ஹெச்.சி.எல் நிறுவனம் முன்வந்துள்ளது. இதனை அடுத்து தமிழக மக்கள் சார்பில் அந்த நிறுவனத்திற்கு தமிழக அரசு நன்றி தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மாண்புமிகு அம்மாவின் அரசு கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. தமிழ்நாடு அரசுக்கு தோள் கொடுக்கும் விதமாக பொதுமக்களும் நிறுவனங்களும் அமைப்புகளும் கொரோனா வைரஸ் நோய் நிவாரண நடவடிக்கைகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களின் பங்களிப்பை மனமுவந்து அளித்து வருகின்றன
அதன் தொடர்ச்சியாக தற்போது ஹெச்.சி.எல் நிறுவனம் 37.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 500 வெண்ட்டிலேட்டர்களை வைரஸ் உண்டாகின்ற மருத்துவ சிகிச்சைக்காக தமிழக அரசுக்கு தர முன்வந்துள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனம் செய்த இந்த உதவிக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழ்நாடு மக்களின் சார்பாக தனது மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்து உள்ளார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது