Publish Date: Wed, 26 Sep 2018 (12:31 IST)
Updated Date: Wed, 26 Sep 2018 (12:32 IST)
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் தடை செய்ய்ப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருவதாக திமுக சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதில் லஞ்சம் பெற்றுக்கொண்டு குட்கா விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் போன்றோர் மீது குற்றச்சாட்டு எழுப்பியது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் கேள்வி எழுப்பினர். வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இது தொடர்பாக இம்மாதம் 6-ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோர் உள்ளிட்ட பல அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இவ்வழக்கில் குட்கா நிறுவன உரிமையாளர் மாதர ராவ், கலால் வரி அதிகாரி பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமார் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள ஒரு குடோனில் இருந்து கைப்பற்ற குட்கா பொருட்களை, லஞ்சம் பெற்றுக்கொண்டு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவற்றில் போதைக்கான மூலப்பொருட்கள் இல்லை எனத் தவறான அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிகாரிகள் குழுவில் ஒருவராக செயல்பட்ட சிவக்குமார் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். அவரை அக்டோபர் 4ந்தேதி வரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.