Publish Date: Fri, 14 Nov 2014 (12:20 IST)
Updated Date: Fri, 14 Nov 2014 (12:27 IST)
தொடர் மழையால் செழிப்பாக வளர்ந்த நிலக்கடலை அறுவடை, ஈரோடு மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு மாவட்டம் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பகுதியாகும். இங்குள்ள விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் கிணற்றுப் பாசனம் இருந்தால் தாங்கள் நெற்பயிர், மஞ்சள், கரும்பு, வாழை உள்ளிட்ட ஆண்டுப் பயிர்கள் நடவு செய்வார்கள். ஆனால் மானாவரி நிலம் வைத்துள்ள விவசாயிகள் வானத்தை நம்பித்தான் தங்கள் நிலத்தில் உழவு செய்யவேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கருக்கு மேல் மானாவாரி நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டனர். பயிரிட்ட சில நாட்களில் மழையில்லாத காரணத்தால் நிலக்கடலை செடி வாடிக் காய்ந்து போகும் நிலையில் இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் வங்கக் கடலில் ஏற்பட்ட புயலின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழை பெய்தது.
இதன் காரணமாக வாடி நின்ற நிலக்கடலைச் செடி, வளமாக வளர்ந்தது. இதனால் விரக்தியில் இருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் நிலக்கடலைச் செடி அறுவடை தற்போது தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் நம்பியூர், கொலப்பலூர், பெருந்துறை, பவானி, பவானிசாகர், புன்செய் புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை அறுவடை நடைபெற்று வருவதால் ஆட்களுக்கு வேலையில்லாப் பிரச்சினைக்கும் தீர்வு ஏற்பட்டுள்ளது.